விஜய் புதிய பயணத்திற்காக புதிய பாதை போட்டிருக்கிறார்!கங்குவா’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் சூர்யா வாழ்த்து!

விஜய் புதிய பயணத்திற்காக புதிய பாதை போட்டிருக்கிறார்!கங்குவா’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் சூர்யா வாழ்த்து!

 

ஸ்டுடியோ க்ரீன் தயாரிப்பில். சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர்கள் சூர்யா, திஷா பதானி உள்ளிட்டப் பலர் நடிப்பில் நவம்பர் 14 ஆம் தேதி பான் இந்தியா வெளியீடாக திரையரங்குகளில் வெளியாக இருக்கும் திரைப்படம் ‘கங்குவா’. இதன் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது.

 

இந்த நிகழ்வில்,

 

நடிகர் கார்த்தி பேசியதாவது ,

“எனது அண்ணன் சூர்யா சினிமாவில் நடிக்கச் சென்றபோது நடிக்கத் தெரியலனு சொன்னாங்க, ஆடத்தெரியலனு சொன்னாங்க, ஃபைட் பண்ணத் தெரியலனு சொன்னாங்க, நல்ல உடல் இல்லைனு சொன்னாங்க. எனக்குத் தெரியும் காலையில 3 மணி நேரம் ஃபைட் கிளாஸ், மாலையில் 3 மணி நேரம் டான்ஸ் கிளாஸ் போனார். ’ஆயுத எழுத்து’ படத்தில் நான் வேலை செய்தபோது அதில் சண்டைக் காட்சிகளில் ஃபைட்டர் மாதிரி சண்டை செய்தார். இன்றைக்கு அனைத்து ஜிம்களிலும் அண்ணனின் படம் இருக்கு. எல்லா பசங்களும் ஹெல்த்தை சீரியஸா எடுத்துக்க அண்ணன் காரணமாக இருக்காரு. எதெல்லாம் நெகடிவ்னு சொன்னங்களோ, அதை எல்லாத்தையும் தன் உழைப்பால் மாற்றிக்காட்டியவர். உழைத்தால் முன்னேறலாம் நினைத்த இடத்தை அடையலாம் என்பதற்கு அண்ணனைத் தவிர, சிறந்த எடுத்துக் காட்டு யாரும் இல்லை. படத்தின் ஆர்ட் டைரக்டர் மிலன் சார், நீங்க இங்க இருந்து இருக்கனும் சார். நான் உதவி இயக்குநராக இருந்தபோது, அவர் உதவி ஆர்ட் டைரக்டர். அவரது உழைப்பு எனக்கு தெரியும். ’கங்குவா’ படத்திற்காக அவர் உருவாக்கியுள்ள உலகம் காலத்திற்கும் பேசப்படும். அவர் இங்கு இல்லை என்பது எனக்கு வருத்தமாக உள்ளது. சிவா சார் ‘கங்குவா’ படத்தை பிரம்மாண்டமாக உருவாக்கியுள்ளார். படம் நிச்சயம் வெற்றிப் பெறும்” என பேசினார்.

 

வீடியோ மூலம் இந்த நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் பேசி, தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா உள்ளிட்ட படக்குழுவினருக்கு தன்னுடைய வாழ்த்துக்களை பகிர்ந்துக் கொண்டார். மேலும் அவர் பேசியதாவது, “நான் முன்னதாக இயக்குநர் சிவாவிடம் தனக்காக ஒரு பீரியட் படம் செய்யும்படி கேட்டபோது அவரும் சரி என்று சொன்னார். அப்படி பார்த்தால், ’கங்குவா’ படம் எனக்காக தயார் செய்யப்பட்ட படமாக இருக்கலாம். இந்தப் படத்தை அடுத்து சிவா எனக்காகவும் இதுபோன்ற ஒரு கதையை உருவாக்குவார். வித்தியாசமான கதைகளை தயாரிப்பதில் ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா மிகுந்த விருப்பம் உடையவர். இந்த ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்க அவர் கேட்டபோது, ஷூட்டிங்கில் இருந்ததால் என்னால் பங்கேற்க முடியவில்லை. இயக்குநர் சிவாவுடன் ’அண்ணாத்த’ என்ற ஒரு படத்தில்தான் பணியாற்றினேன். ஆனால், 20, 30 படங்களில் பணியாற்றியது போன்ற நெருக்கம் அவருடன் ஏற்பட்டிருக்கிறது. சூர்யாவின் கண்ணியம், ஒழுக்கம் நேர்மை அனைவருக்கும் தெரிந்ததே! அவரை போன்ற ஒருவரை யாராலும் பார்க்க முடியாது. சூர்யா வித்தியாசமான படங்களில் நடிக்க மிகுந்த ஆர்வம் கொண்டவர். அவரது விருப்பப்படியே ’கங்குவா’ படம் அமைந்துள்ளது. படம் மிகப்பெரிய வெற்றி பெற வாழ்த்துக்கள்” என்றும் கூறியுள்ளார்.

 

இயக்குநர் சிவா பேசியதாவது,

“’கங்குவா’ படத்தை இரண்டு வருடங்கள் எடுத்தோம். அந்த காலத்தில் சூர்யாவுடன் பழகுவதற்கான அற்புத வாய்ப்பை இறைவன் கொடுத்ததற்கு நன்றி. நூறு சதவீதம் கொடுத்திடலாம் என்று 100 தடவை சூர்யா என்னிடம் சொன்னார். நான் அவரை ரொம்ப கஷ்டப்படுத்தி இருக்கேன். ஆனால் அதை சலிக்காமல் செய்தார். கங்குவா கதாபாத்திரம் நடிப்பதற்கு மன ரீதியாகவும், உடல்ரீதியாகவும் பலம் தேவை. அதை மிகச்சிறப்பாக செய்தார் சூர்யா. சிறுத்தை சிவா என்ற அடையாளத்தை ஞானவேல் ராஜா எனக்கு கொடுத்தார். அடுத்த 15 வருடங்களுக்கு ’கங்குவா’ எனது கரியரில் பெஸ்ட்டாக அமையும் என்று நம்புகிறேன். என்னுடைய அப்பா இப்போது உயிரோடு இல்லை. அவர் இருந்திருந்தால் நிறைய சந்தோஷப்பட்டிருப்பார். எனது மனைவி இதுபோன்ற விழாக்களுக்கு வரமாட்டார். சண்டை போட்டு அவரை வரவைத்தேன். ’கங்குவா’ படத்திற்கு ஒப்பந்தமான பிறகு, கண்டிப்பாக இரண்டு வருடங்கள் மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் கஷ்டப்படுவேன் என்று தெரிந்தது. அந்தச் சமயத்தில் என்னையும், எனது குடும்பத்தையும் மனைவிதான் சந்தோஷமாக பார்த்துக்கொண்டார். அவருக்கு நன்றி. இந்தப் படம் அருமையாக இருக்கிறதாக இதுவரை பார்த்தவர்கள் சொல்லியிருக்கிறார்கள். கமர்ஷியலாக படம் பண்ணிக்கொண்டிருந்தவன் நான். அது சாதாரண விஷயம் இல்லை. ஏனெனில் மக்களுக்கு பிடித்த மாதிரி படங்கள் செய்வது சாதாரண விஷயமில்லை. இந்த மாதிரியான ஒரு படம் பண்ணலாம் என்று ஆசைப்பட்டபோது அந்த ஆசைக்கு அடித்தளம் என்னுடைய நண்பர், வழிகாட்டி, எனக்கு கிடைத்த மிகப்பெரிய வரமாக நினைக்கக்கூடிய அஜித் சாரிடம் இருந்துதான். இத்தனை பேரின் அன்பை சம்பாதித்து வைத்திருக்கும் அஜித் அவரின் நம்பிக்கையை என்னிடம் வைத்தார். சிவா நீ இருக்கக்கூடிய உயரம் இது இல்லை. உனக்கு சினிமாவில் எல்லாமே தெரியுது. நீ சிறகடித்து பறக்க வேண்டும். வானம் மொத்தம் உனக்கு என்று சொன்னார். கங்குவா திரைப்படம் அழகான முயற்சி, கடுமையான உழைப்பு. இதற்கு இறைவன் கண்டிப்பாக பலன் கொடுப்பார்” என்றார் .

கதையின் நாயகன் நடிகர் சூர்யா பேசியதாவது,

“அப்பாவிற்கு மரியாதை கொடுத்து, எங்கள் அனைவருக்கும் வாழ்த்து கூறிய சூப்பர் ஸ்டாருக்கு நன்றி. ரசிகர்களுடைய 27 வருட அன்பிற்கும் வாய்ப்பு கொடுத்த என்னுடைய அனைத்து இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்களுக்கு நன்றி. ஞானவேல் தாய்வீடு மாதிரி. அவரிடம் இருந்து தான் நிறைய விஷயங்கள் தொடங்கின. கார்த்தி நடிக்க தொடங்கியதற்கு ஞானவேல் தான் காரணம். என்னுடைய படிக்கட்டு பெரிதாவதற்கும், அடுத்த பாய்ச்சல் பாய்வதற்கும் எப்போதும் ஞானவேல் காரணமாக இருந்துள்ளார். எப்போதும் மார்க்கெட்டை விட பெரிதாக செய்வதற்குத் தயாராக இருப்பார். பாபி என்னுடைய உடன்பிறக்காத சகோதரர். அவரை நான் நிறைய சைட் அடித்திருக்கிறேன். அவர் நடித்ததால், இந்தப் படம் பான் இந்தியா படம் ஆகியிருக்கிறது. யோகி பாபு நல்ல அறிவான நடிகர். தமிழ் வளர வேண்டும் என்று நினைத்து மதன் கார்க்கியும், அவரது நண்பர்களும் நிறைய வேலை செய்கின்றனர்.

சினிமா வெறும் பொழுதுபோக்கு மட்டும் அல்ல. அது ஒரு குரல். அதனால், சினிமாவை நாம் நிச்சயம் முன்னெடுத்துச் செல்ல வேண்டும். 27 ஆண்டுகளுக்குப் பிறகு, சிவா எடுத்து வந்த இந்த பொக்கிஷத்தில் இருக்கும் காட்சிகள் மிகவும் புதியதாக இருக்கும். தமிழ் சினிமாவை முன்னெடுத்துச் செல்லும் அத்தனை உழைப்பையும் இந்தப் படத்தில் நாங்கள் அனைவரும் போட்டிருக்கிறோம். 107 நாள்கள் எப்படி போனது என்றே தெரியவில்லை.

 

சூரியன் மேலேயே இருந்தால் புது நாள், புது வளர்ச்சி கிடைத்திருக்காது. அதுமாதிரி தான் என்னுடைய ஏற்ற, இறக்கங்களை பார்க்கிறேன். ரசிகர்களுடைய அன்பை என்னுடைய அம்மாவின் அன்பு மாதிரி பார்க்கிறேன். உதயநிதி ஸ்டாலின் என்னுடைய காலேஜ் ஜூனியராக இருந்தாலும் ‘பாஸ்’ என்று கூப்பிடுவேன். அவர் என்னை வைத்து இரண்டு படங்கள் எடுத்திருக்கிறார். இப்போது துணை முதலமைச்சராக ஆகியிருக்கிறார். அவருக்கு என்னுடைய வாழ்த்துக்கள். அவரை எப்பவுமே எளிதாக அணுகலாம். என்னுடைய இன்னொரு நண்பர் ஒருவர் இருக்கிறார். விஜய் புதிய பயணத்திற்காக புதிய பாதை போட்டிருக்கிறார். அவருடைய வரவும் நல்வரவாக இருக்கட்டும்” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *