ஶ்ரீகாந்த் தேவா இசையில் உருவாகியுள்ள “கட்டில்” படத்தின் பாடல் வெளியீட்டு விழா!

ஶ்ரீகாந்த் தேவா இசையில் உருவாகியுள்ள “கட்டில்” படத்தின் பாடல் வெளியீட்டு விழா!

Maple Leaf’s Productions தயாரிப்பில், தமிழ் திரையுலகின் பிரபல எடிட்டர் B.லெனின் கதை, திரைக்கதையில், EV கணேஷ்பாபு, இயக்கி நடித்துள்ள திரைப்படம் “கட்டில்”. இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டினை பாட்டுத்திருவிழாவாகப் படக்குழுவினர் கொண்டாடினர். பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்ற இவ்விழாவினில் தமிழ் திரையுலகின் முன்னணி பிரபலங்கள் பலர் கலந்துகொண்டு படக்குழுவினரை வாழ்த்தினர்.

இவ்விழாவினில்

கே எஸ் ரவிக்குமார் பேசியதாவது….
வைரமுத்து சாருக்குப் பிறகு யார் பேசினாலும் எடுபடாது. வைரமுத்து என் 25 படங்களுக்குப் பாட்டு எழுதியிருப்பார். நீண்ட காலத்திற்குப் பிறகு அவரை நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது மகிழ்ச்சி. தேவா என் படங்களுக்கு இசையமைக்கும்போது கீபோர்டில் எப்போதும் ஶ்ரீகாந்த் தேவா தான் இருப்பார் இப்போது அவர் புகழ் பெறுவது மகிழ்ச்சி. இயக்குநர் நடிகர் EV கணேஷ் பாபு என் படத்தில் நடித்திருக்கிறார். இப்படி ஒரு படம் எடுத்து இயக்குநராகியிருக்கிறார் வாழ்த்துக்கள். இப்படத்தின் குழுவினருக்கு என் வாழ்த்துக்கள் நன்றி.

இயக்குநர் மோகன் ராஜா பேசியதாவது…
வைரமுத்து சார் பல தலைமுறைகளுக்கு இன்ஸ்பிரேஷனாக இருக்கிறார். நானும் அவருக்கு மிகப்பெரிய ரசிகன். தம்பி ரவியின் பயணத்தை உங்கள் ஆசியோடு துவக்கி வைத்தீர்கள், இன்று அவன் உங்கள் ஆசியோடு நன்றாக இருக்கிறான் நன்றி. ஶ்ரீகாந்த் தேவாவின் இசையை மிக நீண்டகாலமாக மிஸ் செய்கிறேன் அந்த மெலடி இசையை இந்தப்படத்தில் மீண்டும் கேட்டது மகிழ்ச்சி. கேமரா யார் என்று கேட்கும் அளவில் சிறப்பாக இருந்தது. ஒரு அருமையான கதையைப் படமாக எடுத்துள்ளார் கணேஷ் அவருக்கும் படக்குழுவிற்கும் வாழ்த்துக்கள். ஶ்ரீகாந்த் தேவாவிற்காகத் தான் இங்கு வந்தேன் திரைத்துறையில் என் ஆரம்ப காலகட்டத்திலிருந்து நண்பராக இருக்கிறார். அவர் நட்பு எனக்குக் கிடைத்தது பாக்கியம். அவருக்கு மிகப்பெரிய வெற்றிகள் கிடைக்க ஆசைப்படுகிறேன் வாழ்த்துக்கள் நன்றி.

நடிகை சிருஷ்டி டாங்கே பேசியதாவது…
சதீஸ் அண்ணா மூலம் தான் இந்தவாய்ப்பு கிடைத்தது. ஃபிலிம் பெஸ்டிவலுக்காக செய்வதாகச் சொன்னார்கள், கர்ப்பிணிப் பெண்ணாக நடிக்கவேண்டும் என்றார்கள் முதலில் எனக்குப் பிடிக்கவில்லை. பப்ளி கேரக்டரில் நடித்துக்கொண்டிருக்கும் போது இந்தக்கேரக்டரில் என்னை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று நினைத்தேன். கணேஷ் அண்ணா கதை சொன்ன போது இந்தக்கதாபாத்திரத்தின் கனம் புரிந்தது. தனலட்சுமி கேரக்டர் மிக வலுவானதாக இருந்தது. எனக்கு மிகப்புதிய அனுபவமாக இருந்தது. லெனின் சார் உடன் பணிபுரிந்த அனுபவம் இன்னும் கற்றுக்கொள்ளும் அனுபவமாக இருந்தது. அவர் என்னை இந்தக்கதாபாத்திரத்தில் பொருத்திப் பார்க்க முடியவில்லை என்றார் ஆனால் என்னால் முடிந்த அளவு செய்தேன் கடைசியில் படம் பார்த்து என்னைப்பார்த்துப் பாராட்டினார் எனக்கு மிக மகிழ்ச்சியாக இருந்தது. கேமரா மேன் ரவி சார் என்னை அழகாகக் காட்டியுள்ளார். ஶ்ரீகாந்த சார் இந்தப்படத்திற்காகத் தேசிய விருது வென்றிருக்கிறார் வாழ்த்துக்கள். வைரமுத்து சார், கார்கி சார் அருமையான பாடல்கள் தந்ததற்கு நன்றி. இந்தப்படம் உங்கள் எல்லோருக்கும் பிடிக்கும் படமாக இருக்கும் நன்றி.

கவிப்பேரரசு வைரமுத்து பேசியதாவது…
தம்பி கணேஷ்பாபு என் பாசத்துக்குரியவர் நேசத்துக்குரியவர். ஒரு நேசத்தை எப்படி எடை போடுவது?, அதைக் காலம் காட்டிக்கொடுத்து விடும். நேரம் தோல்வி வெற்றி எல்லாம் தாண்டி என்னோடு பல ஆண்டுகாலமாகப் பயணித்து வருகிறார் அவர் என் அன்புக்குரியவர். கட்டில் மாதிரியான சிறு படங்கள் ஓடினால் தான் தமிழ் சினிமாவிற்கு நல்லது. பெரிய படங்கள் திட்டமிட்டுப் பார்க்க வைக்கப்படுகிறது, ஆனால் சிறு படங்கள் தான் நம்மைச் சிறகடித்துப் பறக்கவைக்கும் நம் சிந்தனையை வளர்க்கும். பழைய படங்கள் பார்த்தால் அதில் எல்லாமே பெண்ணின் படங்கள் இருக்கும் இப்போது சினிமாக்களில் பெண்ணின் படங்களைப் பார்க்க முடிகிறதா? பெண்ணுக்குச் சரிசமமான இடம் தந்த சினிமா தான் தமிழ் சினிமாவின் பொற்காலம், அந்த பொற்காலத்தை தன் கட்டில் மூலம் மீட்டுக்கொண்டு வந்திருக்கிறார். இது மாதிரியான சின்னப்பட்டங்கள் ஜெயிப்பது தான் மக்களுக்கு மகிழ்வைத்தரும் என என் போல் சமூக செயல்பாட்டாளர்கள் ஆசைப்படுகிறோம். கண்ணதாசன், வாலி இருந்தபோது அவர்களோடு போட்டிபோட்டு அவர்களோடு நான் நின்றேன் அவர்களை ஜெயிக்க முடியாது எனத் தெரியும், ஆனால் அவர்களோடு நானும் இருக்கிறேன் என நின்றேன் அது போதுமா ? இப்போது நான் கார்கியோடு போட்டிபோடுகிறேன். அவர் விஞ்ஞானம் படித்துவிட்டு வந்து பேராசிரியர் ஆனார் ஆனால் எனக்குப் போட்டியாக வருவார் என நினைக்கவில்லை. இந்தப்படத்தில் அருமையான வரிகள் தந்துள்ளார். அவருக்கு இந்தப்படத்திற்குத் தேசியவிருது கிடைக்க வாழ்த்துக்கள். கணேஷ்பாபு நினைவுகளின் வலியை இப்படம் மூலம் பதிவு செய்துள்ளார் அவர் வெற்றிப் பெற வாழ்த்துக்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *