அப்பா தந்த பாலியல் தொல்லை – குஷ்பூ

நடிகை குஷ்பூ பல ஆண்டுகளாக இவர் தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். 2010 ஆம் ஆண்டு தனது அரசியல் வாழ்க்கையை தொடங்கிய குஷ்பூ, பல அரசியல் கட்சிகளை கடந்து தற்போது பாஜகவில் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக சமீபத்தில் பொறுப்பேற்று இருக்கார். இந்நிலையில் 8 வயதிலேயே எனது தந்தையால் நான் பாலியல் ரீதியாகவும் உடல் ரீதியாகவும், துன்புறுத்தப்பட்டிருக்கிறேன் என நடிகை குஷ்பூ பேட்டி ஒன்றில் தெரிவித்த செய்தி இப்போது வைரலாகி வருகிறது.
இது குறித்து அவர் கூறியதாவது..,
” ஒரு குழந்தைக்கு துஷ்பிரயோகம் செய்யப்பட்டால், அது அதன் வாழ்நாள் முழுவதும் ஒரு வடுவாக ஆறாமல் இருக்கும் என்று நான் நினைக்கிறேன். அது ஆண், பெண் என்ற வித்தியாசம் கிடையாது. எனது அம்மாவிற்கு மிகவும் மோசமான ஒரு திருமண வாழ்க்கை அமைந்தது. மனைவியையும், குழந்தையையும் அடிக்கும் ஒரு குடும்பத் தலைவன் எங்களுக்கு அமைந்தார். தனது ஒரே மகளை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்வதை தன்னுடைய பிறப்புரிமை போல் அவர் நினைத்துக் கொண்டிருந்தார்.
எனக்கு எட்டு வயதாகும் போது என்னை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்ய தொடங்கினார். அவருக்கு எதிராக துணிச்சலுடன் நான் பேசும் போது எனக்கு 15 வயது. எனக்காக நான் ஒரு முடிவு எடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. ஒருவேளை நான் இதை வெளியே சொன்னால் குடும்ப உறுப்பினர்கள் பாதிக்கப்படுவார்கள் என்ற அச்சம் எனக்கு இருந்தது. அதன் காரணமாகவே நான் பல ஆண்டுகள் அமைதி காத்து வந்தேன். இதை நான் கூறினால் எனது அம்மா நம்பவில்லை என்றால் என்ன செய்வது என்ற அச்சம் எனக்கு இருந்தது.
கணவனே கண்கண்ட தெய்வம் என்ற மனப்பான்மையிலேயே எனது அம்மா வாழ்ந்து வந்தார். இனியும் தாங்க முடியாது என்று எனது 15 வயதில் முடிவு செய்த நான். அவருக்கு எதிராக நான் பேசத் தொடங்கினேன். எனக்கு 16 வயது கூட இருக்காது, அப்போது அவர் எங்களை விட்டு பிரிந்து சென்றார். அடுத்த வேலை உணவுக்கு நாங்கள் என்ன செய்வதென்று தெரியாத நிலையில் இருந்தோம். எனது வாழ்வில் குழந்தை பருவமானது பல பிரச்னைகளை கொண்டது. ஒரு கட்டத்தில் என்ன நடந்தாலும் மன தைரியத்தோடு போராட வேண்டும் என்ற மனப்பான்மை எனக்கு வந்தது.” என்று குறிப்பிட்டுள்ளார்.