ஷூட்டிங்கை கேன்சல் செய்துவிட்டு வந்துவிட்டேன்! டபுள் டக்கர் பட பத்திரிக்கையாளர் சந்திப்பில் இயக்குனர் மிஷ்கின்!

ஷூட்டிங்கை கேன்சல் செய்துவிட்டு வந்துவிட்டேன்! டபுள் டக்கர் பட பத்திரிக்கையாளர் சந்திப்பில் இயக்குனர் மிஷ்கின்!

ஏர் ஃபிளிக் தயாரிப்பில் மீரா மஹதி இயக்கத்தில் வித்யாசாகர் இசையில் இந்தியாவிலேயே முதல்முறையாக புதுமையாக வடிவமைக்கப்பட்டுள்ள அனிமேஷன் பாத்திரங்களுடன் தீரஜ், ஸ்முரிதி வெங்கட், கோவை சரளா எம்.எஸ். பாஸ்கர் மற்றும் பலர் நடித்திருக்கும் கலகலப்பான ஃபேன்டசி ஆக்ஷன் திரைப்படம் ‘டபுள் டக்கர்’. இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேப்பில் நடைபெற்றது. இந்நிகழ்வில் படத்தில் நடித்த நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் ஆகியோருடன் இயக்குநரும் நடிகருமான மிஷ்கின் கலந்து கொண்டார்.

 

இந்த நிகழ்வில்,

படத்தின் இயக்குநர் மீரா மஹதி பேசும் போது…

 

பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம், 12 வருட உழைப்புக்குப் பின்னர் எனக்கு இந்த மேடை கிடைத்திருக்கிறது. நான் யாரிடமும் உதவி இயக்குநராகப் பணியாற்றியது இல்லை. இது வரை பத்து பனிரெண்டு குறும்படங்கள் எடுத்திருக்கிறேன். முகநூல் வட்டத்தில் இருக்கும் என் நண்பர்கள் குறும்படத்தைப் பார்த்துவிட்டு நீ சினிமாவே இயக்கலாம் என்று ஊக்கம் கொடுத்தார்கள். நான் கதை சொல்வதற்காக அஜீத், விஜய் போன்ற பெரிய ஹீரோக்களிடம் செல்லவில்லை. அவர்களை நெருங்கக்கூட முடியாது என்று தெரியும். மூன்று அல்லது நான்கு கோடி பட்ஜெட்டிற்குள் வரும் வளர்ந்து வரும் நாயகர்கள் சிலரிடம் தான் கதை சொல்ல முயன்று வந்தேன்.

 

மைம் கோபி அவர்கள் மூலமாகத் தான் இந்த வாய்ப்பு எனக்கு வந்தது. நான் ஒரு இண்டிபெண்டண்ட் ஃபிலிம் மேக்கர் என்று சொல்லிக் கொண்டு மைம் கோபி சாரிடம் கதை சொல்லப் போயிருந்தேன். மைம் கோபி சார் தான் என்னை தீரஜ் சாரிடம் அறிமுகம் செய்து வைத்தார்கள். தீரஜ் சார் என்னிடம் எதுவுமே கேட்கவில்லை, நீ என்ன சாதி..? என்ன மதம்…? யாரிடம் வேலை பார்த்தாய்..? என்று எதுவுமே என்னிடம் கேட்கவில்லை அவர் கேட்டதெல்லாம் ஐந்து நிமிடத்தில் என்னை உன்னால் இம்ப்ரஸ் செய்ய முடியுமா..? என்று கேட்டார். நான் அந்த ஐந்து நிமிடத்தைத் தான் யாரும் எனக்குக் கொடுக்க மாட்டேன் என்கிறார்கள் சார் என்று சொன்னேன். அவர் கொடுத்தார். நான் கதை சொல்லத் துவங்கினேன். கதை சொல்லி முடிக்கும் போது 1 மணி நேரம் ஆகியிருந்தது. ஷூட்டிங்கை நிறுத்திவிட்டு தீரஜ் சார் என்னிடம் கதை கேட்டார்.

எனது முதல் மேடையிலேயே மிஷ்கின் சார் அமர்ந்திருப்பதை நான் என் பாக்கியமாகக் கருதுகிறேன். இந்த வாய்ப்பை எனக்குக் கொடுத்த அனைவருக்கும், இந்தப் படத்தின் உருவாக்கத்தில் ஈடு இணையின்றி உழைத்த அனைவருக்கும் என் நன்றிகள். என்னைப் போல் வளர்ந்து வரும் இயக்குநர்களுக்கு பத்திரிகை நண்பர்கள் ஆதரவு கொடுங்கள். நீங்கள் சொல்வதையும் எழுதுவதையும் தான் மக்கள் நம்பி திரையரங்கிற்கு வருவார்கள். நாங்கள் எவ்வளவு சொன்னாலும் மக்கள் நம்பமாட்டார்கள். நீங்கள் சொல்வதைத் தான் நம்புவார்கள். ‘டபுள் டக்கர்’ படத்தைப் பற்றி எழுதி எங்களுக்கு ஆதரவு தாருங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன்.

 

இயக்குநரும் நடிகருமான மிஷ்கின் பேசும் போது…

காலதாமதமாக வந்ததற்கு முதலில் எல்லோரிடமும் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். நான் செல்போனை அணைத்து வைத்துவிட்டு தொடர்ச்சியாக படப்பிடிப்பில் இருந்தேன். எதேச்சையாக போனை ஆன் செய்த போது தீரஜ் இடம் இருந்து போன் வந்தது. தொடர்ச்சியாக ஷூட்டிங்கும் இருந்தது. இன்று 2 மணியிலிருந்து 10 மணி வரை கால்ஷீட். என்ன செய்வது என்று தெரியாமல் ஷூட்டிங்கை கேன்சல் செய்துவிட்டு வந்துவிட்டேன். ஏனென்றால் தீரஜ்ஜை எனக்கு அவ்வளவு பிடிக்கும். ஏன் பிடிக்கும் என்று கேட்டால், அவன் இதுவரை குறைந்தது ஒரு 500 உயிரையாவது காப்பாற்றி இருப்பான். அவன் ஒரு இதய சிகிச்சை நிபுணர். குறைவாக சொல்கிறேன் என்று நினைக்கிறேன். இன்னும் சொல்லப்போனால் ஆயிரத்திற்கும் அதிகமான உயிர்களை காப்பாற்றிய மருத்துவர் அவன். உதய்க்கு நெருங்கிய நண்பன், நம் முதல்வரை சூழ்ந்திருக்கும் முக்கிய மருத்துவர்களில் தீரஜ்ஜும் ஒருவன். சற்றும் தலைக்கணம் இல்லாதவன், மிகுந்த அன்பு கொண்டவன், எளிமையாகப் பழகக்கூடியவன். அவன் கூப்பிட்டதும், அவன் இந்த உலகத்திற்குச் செய்த சேவைக்காக என் படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டு நான் வந்துவிட்டேன்.

 

என் திரைப்படங்களில் மருத்துவ தொழில்நுட்பம் சார்ந்த காட்சிகள் இடம் பெறும் போது, அதில் ஏற்படும் குழப்பங்களை தீரஜ்ஜிடம் தான் கேட்பேன். அவன் தான் அதைத் தீர்த்து வைப்பான். மிக எளிமையாக எனக்கு அது குறித்து விளக்கம் கொடுப்பான். இயல்பாகவே கலகலப்பான பையன் அவன். படங்களும் ஜனரஞ்சகமாக, கலகலப்பாக இருக்க வேண்டும் என்று விரும்புவான். அவனுடன் இருந்தாலே மிகவும் சந்தோஷமாக இருக்கும்.

தமிழ் சினிமாவில் லென்ஸைப் பற்றித் தெரிந்த ஒரு சில இயக்குநர்களில் நானும் ஒருவன். சினிமாவில் மட்டும் தான் less is more. பத்திரிகைக்காரர்கள் எப்போதும் என்னை தூக்கிவிட்டிருக்கிறீர்கள். நந்தலாலா, ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படங்களை நன்றாக இல்லை என்று சிலர் சொன்ன போது, அதை தூக்கிப் பிடித்தவர்கள் நீங்கள் தான். நீங்கள் நடிகர் நடிகைகள் பற்றி எழுதும் போதும் கவனமாக எழுதுங்கள், இப்படம் வெற்றி பெற வாழ்த்துகிறேன். இப்படத்திற்கு ஆதரவு கொடுங்கள். நன்றாக இருக்கும்பட்சத்தில் நீங்கள் கண்டிப்பாக மக்களிடம் கொண்டு போய் சேர்த்துவிடுவீர்கள் என்று தெரியும். உங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி.

 

படத்தின் நாயகன் தீரஜ் பேசியதாவது…

 

என்ன பேசுவது, எங்கிருந்து துவங்குவது என்று தெரியவில்லை. மிஷ்கின் சார் உங்களுக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி. உங்களுடைய பேச்சு இன்று அட்டகாசமாக இருந்தது. Heartல் துவங்கி Art வரைக்கும் எல்லாவற்றையும் பற்றி பேசிவிட்டீர்கள். இன்று நீங்கள் இந்த மேடையிலிருப்பது இந்த நிகழ்வை மேலும் சிறப்புமிக்கதாக்குகிறது. சந்துரு என் முதல் படத்தின் இயக்குநர். அவருக்கு என் நன்றி இந்தப் படத்திற்கு உங்கள் ஆதரவை தாருங்கள் நன்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *