திரையுலகப் பிரபலங்கள் 30 பேர் இணைந்து வெளியிட்ட’சமூக விரோதி’ டைட்டில் லுக் !

திரையுலகப் பிரபலங்கள் 30 பேர் இணைந்து வெளியிட்ட’சமூக விரோதி’ டைட்டில் லுக் !

 

‘சமூக விரோதி’ படத்தின் டைட்டில் லுக் எனப்படும் முதல் பார்வையை 30 பேர் வெளியிட்டுள்ளனர்.அரசியல் தலைவர்கள் தொல்.திருமாவளவன்,தோழர் கே. பாலகிருஷ்ணன்,வன்னி அரசு, நாஞ்சில் சம்பத், திண்டுக்கல் லியோனி, திரைப்படக் கலைஞர்கள் விஜய் சேதுபதி, சசிகுமார் , சமுத்திரகனி, இயக்குநர் ராஜு முருகன்,வாணி போஜன் சினேகன், கலையரசன், மோகன் ஜி, போஸ் வெங்கட் போன்று

பல்வேறு ஆளுமைகள் 30 பேர் டைட்டில் லுக்கைத் தங்கள் சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளனர்.

 

தமிழ்த் திரையுலகில் முதன்முதலாக ஒரு திரைப்படத்தின் முதல் பார்வையை இத்தனைப் பேர் வெளியிட்டுள்ளது பரபரப்பாகப் பேசப்படுகிறது.

 

 

சீயோனா ஃபிலிம் பேக்டரி தயாரிப்பில் ‘சமூக விரோதி ‘என்கிற திரைப்படம் உருவாகி உள்ளது. இத் திரைப்படத்தை

இயக்குநர் சீயோன் ராஜா இயக்கியுள்ளார். இவர் ஏற்கெனவே தனது முதல் படமாக ‘பொது நலன் கருதி’ படத்தினை கந்து வட்டி கலாசாரத்திற்கு எதிராக எடுத்து பாராட்டப்பட்டவர்.

 

இப்படத்திற்கு ஒளிப்பதிவு- ஜிஜூ மோன் P.S., இசை- மலாக்கி , கலை -முஜிபுர் ரஹ்மான், எடிட்டிங் – மீனாட்சி சுந்தர், ஸ்டண்ட் – பிரபு, என்று தொழில்நுட்பக் கூட்டணி உருவாகியுள்ளது.நிர்வாகத் தயாரிப்புப் பொறுப்பை எஸ். வினு ஏற்றுள்ளார். T. அருள்மணி சீயோன் ராஜா தயாரித்துள்ளார்.

 

இந்த ‘சமூக விரோதி’ திரைப்படத்தில் பிரஜின் ,நாஞ்சில் சம்பத் ,கஞ்சா கருப்பு ,வனிதா விஜயகுமார்,தயாரிப்பாளர் கே.ராஜன் ,வழக்கு எண் முத்துராம் மற்றும் பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.

 

 

‘சமூக விரோதி ‘ டைட்டில் லுக், வெளியான நிமிடத்தில் இருந்தே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

 

இத்திரைப்படம் பற்றி இயக்குநர் சீயோன் ராஜா பேசுகையில்

 

”ஒரே அலைவரிசை எண்ணம் கொண்ட நண்பர்களின் கூட்டு முயற்சியால் சீயோனா ஃபிலிம் ஃபேக்டரி என்கிற நிறுவனம் உருவாகி உள்ளது.இந்நிறுவனத்தின் சார்பில், எனது இயக்கத்தில் உருவாகியுள்ள இரண்டாவது படமாக ‘சமூக விரோதி ‘படம் உருவாகி உள்ளது.

 

சில சமூக விரோதிகள் அரசியல்வாதிகளையும் ,அரசின் அதிகாரத்தைப் பயன்படுத்தும் உயர் பொறுப்பில் இருப்பவர்களையும், தனது கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு சமூகத்தில் பல நாசகரமான வேலைகளில் புத்திசாலிதனமாக ஈடுபட இந்தச் சமுதாயத்தில் பணத் தேவையுடன் வேலையின்றி ,பொருளாதார வறுமை கொண்ட இளைஞர்களைத் தேடிப் பிடித்து எப்படி அவர்களைத் தொழில்நுட்பத்திற்குப் பழக்கி சமூக விரோத செயல்களில் திட்டமிட்டு ஈடுபடுத்துகிறார்கள்

என்பதை ‘சமூகவிரோதி’ திரைப்படத்தின் மூலமாக அம்பலப்படுத்தி உள்ளேன்.

 

“புனிதர்களின் கரங்களில் புறாக்களின் ரத்தம் “என்கிற சிந்தனை முழக்கத்தோடு இந்தப் படத்தின் தலைப்பை வைத்துள்ளோம்.

 

அறமே இல்லாத மனிதர்களிடம் இந்தச் சமூகம் கருணையை எதிர்பார்க்கிறது,மூளைச் சலவை செய்பவனிடம் முன்னேற வழி கேட்கிறது இதுதான் இந்தத் தலைமுறையின் முரண்.கருத்தியல் ரீதியாக நான் வைத்திருக்கும் விவாதத்திற்கு சமூகம் செவி சாய்க்கும் என்றே நம்புகிறோம்.

இப்படத்தில் நல்லவன் ,கெட்டவன் என்ற எல்லையை வாழ்க்கைச் சம்பவங்களால் கடந்த ஒரு வைராக்கியம் மிகுந்த இளைஞனாக பிரஜின் நடித்துள்ளார். தனது தோற்றம், உடல் மொழி, பேச்சு என அனைத்தையும் மாற்றிக்கொண்டு ஒரு வீரியமுள்ள பாத்திரமாக வாழ்ந்துள்ளார் ,படத்தில் நடித்துள்ள அனைவருமே அந்தந்த, பாத்திரத்திற்கு ஏற்ப தன்னை எப்படித் தன் வயப் படுத்திக் கொண்டு உரிய முன் தயாரிப்புடன் நடிக்க வேண்டும் என்று விவாதித்து ,கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்துக் கொடுத்திருக்கிறார்கள்.கண்டிப்பாக இந்த அர்ப்பணிப்புள்ள உழைப்பு படம் பார்ப்பவரை ஆச்சரியப்பட வைக்கும் .அந்த அளவிற்கு அனைவரும் நன்றாக நடித்து ஒத்துழைப்பு கொடுத்துள்ளார்கள்.

எங்கள் படக்குழுவின் இந்தப் படைப்பைத் திரையுலக பிரமுகர்களும் ,அரசியல் ஆளுமைகளும், ஊடக நண்பர்களும் வெளியிட்டுப் பாராட்டி இருப்பது எங்களை மேலும் ஊக்கப்படுத்துகிறது. அவர்களுக்கு நன்றி என்று ஒற்றை வார்த்தையில் எங்கள் உணர்வுகளைச் சொல்லி விட முடியாது. பொறுப்புமிக்க கலைஞனாக இருப்பதே அனைவருக்கும் நாங்கள் செலுத்தும் மரியாதையாக இருக்கும் என நம்புகிறேன்” என்று படத்தின் தயாரிப்பாளரும் ,இயக்குநருமான சீயோன் ராஜா கூறினார்.

படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *