‘I,Nobody’ திரைவிமர்சனம் ரேட்டிங் 4.1/5
படம் : ‘I,Nobody’
நடிகர்கள்
பிருத்விராஜ் சுகுமாரன் – ராஜீவன் பார்வதி திருவோத்து – மீரா ஹக்கிம் ஷாஜகான் – அனஸ் அசோகன் – ஜேக்கப்
விஜயராகவன் – முதல்வர் மதுபால் – சிஐ ஜோமோன் சங்கர் ராமகிருஷ்ணன் – Dysp அஜித் நக்ஷத்ரா – ஜியா
தொழில்நுட்பக் கலைஞர்கள்
இயக்குநர் : நிசாம் பஷீர் தயாரிப்பாளர்கள் : சுப்ரியா மேனன், முகேஷ் ஆர். மேத்தா, சி.வி. சாரதி
தயாரிப்பு நிறுவனங்கள் : பிரித்விராஜ் புரொடக்ஷன்ஸ் & E4 எக்ஸ்பெரிமென்ட்ஸ் எழுத்தாளர் : சமீர் அப்துல் ஒளிப்பதிவாளர் : தினேஷ் புருஷோத்தமன் படத்தொகுப்பாளர் : ரமீஸ் எம்.பி. இசை : ஜேக்ஸ் பிஜாய் நிர்வாகத் தயாரிப்பாளர் : ஹாரிஸ் தேசோம்

கதை ஓபன் பண்ணா….!
ராஜீவன் ஒரு தலைமை செயலக அரசு (Secretariat) ஊழியர். அவரது மனைவி மீரா மற்றும் இரண்டு பெண் குழந்தைகள் கொண்ட குடும்பத்தில் சில மனக்கசப்புகளும், உறவுச் சிக்கல்களும் நிலவுகின்றன. அவர்கள் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் கதை தொடங்கும் முதல் தருணத்திலேயே அந்தப் பிரச்சினைகள் பார்வையாளர்களுக்குத் தெளிவாகத் தெரிகின்றன. இந்தச் சிக்கல்களுக்கு பல காரணங்கள் உள்ளன; அவற்றில் முக்கியமான ஒன்று ராஜீவனின் குணநலனே.
நகரில் உள்ள ஒரு வங்கியில் பட்டப்பகலில் நடைபெறும் கொள்ளைச் சம்பவம், ராஜீவனின் வாழ்க்கையை தலைகீழாக மாற்றுகிறது. திடீரென அனைவரின் கவனமும் அவர் மீது திரும்புகிறது. மெதுவாக, அவரைச் சுற்றியுள்ள அனைவரும் அவரை வேட்டையாடத் தொடங்குகிறார்கள்.
புதிய உணவுச் சங்கிலியில் உயிர் பிழைத்து நிற்க, வெட்டுக்கிளி புல்லை மட்டும் அல்ல, தவளையையும் விழுங்க வேண்டிய நிலை வரும் என்பதை ராஜீவன் உணர்கிறான். அந்த உணர்வோடு, சில கடுமையான முடிவுகளையும் செயல்களையும் மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலை உருவாகிறது. அவை ராஜீவனை மட்டும் அல்லாமல், அவரது குடும்பத்தையும் இன்னும் ஆழமான சிக்கல்களுக்குள் தள்ளுகின்றன.இதுவே இந்த திரைப்படத்தின் மையக் கதைக்களம்.


படத்தில் மிகவும் துல்லியமாகக் கோரியோகிராபி செய்யப்பட்ட பல ஆக்ஷன் காட்சிகள் உள்ளன. ஒவ்வொன்றும் மற்றொன்றை விட சிறப்பாக அமைந்துள்ளன. ஆரம்பம் முதல் முடிவு வரை நாயகன் அடியும் வாங்குகிறார், அடியும் கொடுக்கிறார். வழியிலே சென்று கொண்டிருக்கும்போது தேவையில்லாமல் அடிவாங்கும் ஒருவன்தான் ராஜீவன் என்று நினைத்துவிட வேண்டாம். பிரச்சினைகள் தொடங்கிய பிறகு, அவற்றில் எதுவும் அவனது கட்டுப்பாட்டில் இருப்பதில்லை.
பிரித்விராஜ் ஆக்ஷன் காட்சிகள் அசத்தல் ரகம் . ஆக்ஷன் மட்டுமல்ல, அந்தக் கதாபாத்திரத்தையே அவர் முழுமையாக உள்வாங்கி நடித்திருக்கிறார் என்று சொல்லலாம். மனைவி மீராவிடமும் இளைய மகளிடமும் ராஜீவன் நடந்துகொள்ளும் விதத்திலேயே அவனுடைய சிக்கலான மனநிலையை பார்வையாளர்களுக்குப் புரியவைக்க இயக்குநரால் முடிகிறது; அதற்குக் காரணம் பிரித்விராஜின் நடிப்பே.
மீராவாக நடித்துள்ள பார்வதியும் அந்தக் கதாபாத்திரத்தை மிகுந்த அளவுக்குள் கட்டுப்படுத்தப்பட்ட நடிப்பால் உயிர்ப்பித்துள்ளார். இயல்புத்தன்மையைச் சிதைக்காமல், மீராவை நம் முன் மிகவும் நம்பகமாக நிறுத்துகிறார்.

ராஜீவனுடன் ஏற்பட்ட பிரச்சினைகளுக்கு நடுவே மேலும் பல சிக்கல்கள் அவளைச் சூழும்போது, அந்தப் பெண் அனுபவிக்கும் மனஅழுத்தமும் பார்வதியின் உடல்மொழியில் தெளிவாகப் பிரதிபலிக்கிறது. குழந்தை நட்சத்திரங்களான நக்ஷத்ரா மற்றும் ஐராவும் தங்களுக்கான பங்கை அழகாகச் செய்துள்ளனர்.
மேலும் குறிப்பிட வேண்டிய இன்னொரு கதாபாத்திரம் அசோகன் நடித்த ஜேக்கப் கதாபாத்திரம் …! இந்தப் படத்தில் அசோகனுக்கு இயக்குநர் நிசாம் பஷீர் தனித்துவமான ஒரு இடத்தை வழங்கியிருக்கிறார்.
இந்தப் படம் வெறும் ஹைஸ்ட் (Heist) திரைப்படமாக மட்டும் இல்லாமல் இருப்பதற்கான இன்னொரு காரணமும் உண்டு. அப்பாவும் அம்மாவும் அறைக்குள் கதவை மூடிக்கொண்டு சண்டையிடும்போது, கதவுக்கு வெளியே காதை வைத்துக் கொண்டு உள்ளே என்ன நடக்கிறது என்று புரியாமல் நிற்கும் குழந்தைகள். ஆனால், நடப்பதையெல்லாம் அவர்கள் உணர்ந்துகொண்டு இருக்கிறார்கள்; அதனால் அவர்களும் பாதிக்கப்படுகிறார்கள் என்பதைக் கூட, இந்தப் படம் தனது எல்லா பரபரப்புகளுக்கும் நடுவே ஒரு ஆழ்ந்த மூச்சை இழுத்தபடி மிக அமைதியாகச் சொல்லிச் செல்கிறது. அவை இயல்பாக உருவாகும் சூழலை அமைத்துக் கொடுத்திருப்பதே இந்தப் படத்தின் மிகப் பெரிய வெற்றியாகும்…

தொழில்நுட்ப ரீதியிலும் உயர்தரத்தைப் பேணும் படமாக ‘I, Nobody’ திகழ்கிறது. ஜேக்ஸ் பிஜோய் அமைத்த பின்னணி இசை, படத்தின் உணர்ச்சி ஏற்றத் தாழ்வுகளுடன் இயல்பாக இணைந்து பயணிக்கிறது. பின்னணி இசை மட்டுமல்ல, படத்தின் எடிட்டிங்கும் ஒளிப்பதிவும் அதே துல்லியத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளன. நிசாமின் கதை சொல்லும் பாணிக்கு தனித்துவத்தை அளிப்பதில் தினேஷ் புருஷோத்தமன் உருவாக்கிய காட்சிகளும், அவற்றை ரமீஸ் தொகுத்த விதமும் முக்கிய பங்காற்றுகின்றன.
ஒரு சாதாரண மனிதன் அசாதாரணமான செயல்களைச் செய்வது சினிமாவில் புதிதல்ல. ஒருவரை பொய்யான குற்றச்சாட்டுகள் மூலம் சமூகத்தின் எதிரியாக சித்தரித்து, பின்னர் அவரையே அழித்தொழிப்பதும் சமூக ஊடகங்களும் அதன் மூலம் மூலம் எது என்பது தெரியாமலே உண்மைக்கு புறம்பாக பேசுவது அதை ஜனங்கள் நம்புவது போன்ற காலமும் நிறைந்த இன்றைய உலகில் புதுமையான விஷயமல்ல; அன்றாடம் நம் கண்முன்னே நிகழ்ந்து கொண்டிருப்பதுதான். ஆனால், பலமுறை சொல்லப்பட்ட இந்த பழைய கதைதான் ஆனால் நிசாம் அதை சொன்ன விதம் சுவாரஸ்யமாக இருக்கிறது …!
இரண்டே முக்கால் மணி நேரம் பார்வையாளர்களை திரையரங்க இருக்கையில் கட்டிப்போட ஒரு திரைப்படத்திற்கு என்னென்ன தேவையோ,ஆம், உங்களுக்குத் தேவையானது எல்லாம் ராஜீவனிடம் இருக்கிறது. அவை அனைத்தும்’I,Nobody’**யில் இருக்கின்றன. படக்குழுவினர் அனைவர்க்கும் பாராட்டுக்கள்…!
நம்ம tamilprimenews .com ரேட்டிங் 4.1/5

