மை லார்ட் திரை விமர்சனம் ரேட்டிங் 3.6/5
மை லார்ட்
நடிப்பு: சசிகுமார், சைத்ரா ஜே ஆச்சார், ஆஷா சரத், குரு சோமசுந்தரம், ஜெயபிரகாஷ், கோபி நயினார், வசுமித்ரா தயாரிப்பு: ஜெயந்தி அம்பேத்குமார்
இசை: சான் ரோல்டன் ஒளிப்பதிவு: நிரவ் ஷா இயக்கம்: ராஜு முருகன் பிஆர் ஓ: யுவராஜ்

கதை open பண்ணா ….!
படம் தொடங்கும் போதே கிட்னி விற்கும் ப்ரோக்கர் ஊருக்குள் கந்து வட்டி ஆசாமியோடு சேர்ந்து கொண்டு ஊர் மக்களின் ரத்த வகையை டைரியில் குறிப்பெழுதி வைத்து கொண்டு கிட்னி திருட்டு இங்கு எப்படி சர்வ சாதாரணமாக நடக்குது என்பதை காட்டும் போது உண்மை சுடுகிறது..! மத்திய அமைச்சரான ஆஷா சரத்துக்கு இரண்டு சிறுநீரகங்களும் பழுதாகி உயிருக்கு போராடும் நிலை ஏற்படுகிறது. இதனால் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யும் முயற்சியில் ஈடுபடும் அவர், வெளி உலகத்திற்கு தான் ஆரோக்கியமாக இருப்பதாக காட்டிக் கொண்டு, அறுவை சிகிச்சையை ரகசியமாக செய்து முடிக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார். அதே சமயம், அவரது இரத்தப் பிரிவு அரிதானது என்பதால், அவருக்கான மாற்று சிறுநீரகம் கிடைப்பதில் சிக்கல் ஏற்படுகிறது. இந்திய அளவில், அவருக்கான மாற்று சிறுநீரகத்தை தேட, அதற்கு பொறுத்தமானவராக சசிகுமார் இருக்கிறார். சசிகுமாரை தேர்வு செய்யும் அமைச்சர் தரப்பு, அவரை ரகசியமாக சென்னைக்கு அழைத்து வர முயற்சிக்கிறது. அவர்களது வழியில் சென்று தனது வாய்ப்பை சரியாக பயன்படுத்தி அரசு இயந்திரத்திற்கும், அதிகார வர்க்கத்திற்கும் சாமானியனான சசிகுமார் வாசிக்கும் தீர்ப்பு மைலார்ட் …!
முத்து சிற்பி என்ற அழகான பெயருடன் சசிகுமார் முரட்டு தாடியும் வறண்ட முக தோற்றத்தில் நடிக்காமல் சும்மா நின்றாலே அந்த கதாபாத்திரத்தின் தாக்கத்தை ரசிகர்கள் மனதில் ஆழமாக பதிந்து விடுகிறது. சசிகுமாரின் மனைவியாக நடித்திருக்கும் சைத்ரா இயல்பான நடிப்பின் மூலம் கவனம் ஈர்ப்பதோடு, தந்தை ஆவிவந்து சாமியாடிஅதிரடியான நடிப்பை வெளிப்படுத்தி அமர்க்களப்படுத்திகிறார். மத்திய அமைச்சர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஆஷா சரத், அதிகார திமிரை தனது கண்கள் மூலமாகவே வெளிப்படுத்தி மிரட்டுகிறார். படுக்கையில் இருந்தாலும், தனது கதாபாத்திரத்தின் பலம் அறிந்து நடித்திருக்கும் அவரது நடிப்புத் திறன் வியக்க வைக்கிறது. பத்திரிகையாளராக நடித்திருக்கும் குரு சோமசுந்தரம், அடிபட்டு, மிதிபட்டாலும் எதற்கும் விலை போகாமல் நியாயம் பக்கம் நிற்கும் நல்ல மனிதர் கதாபாத்திரம் மனுஷன் அசத்தி விட்டார் …!வள்ளலார் ஆதரவற்ற பெண்கள் மையத்தில் இருக்கும் பெண்களும் , வாணி அம்மாவும் புரோக்கராக வரும் அருள் ,மற்றும் கந்துவட்டி கொடுக்கும் நரசிம்மன், நீதிபதியாக வரும் ஜெயபிரகாஷ், இப்படி எல்லோரும் தங்கள் கதாபாத்திரங்கள் மூலம் இந்த படத்திற்கு வலு சேர்த்து இருக்கிறார்கள்…

ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா, எளிய மனிதர்களின் வாழ்வியலை எதார்த்தமாக காட்சிப்படுத்தி, இயக்குநர் ராஜு முருகனின் கதை சொல்லலுக்கு பலம் சேர்த்திருக்கிறார். எந்த இடத்திலும் தனக்கான தனித்துவத்தை வெளிப்படுத்தாமல், இயக்குநரின் பார்வைக்கு ஏற்ப தனது கேமராவை பயணிக்க வைத்திருக்கும் நீரவ் ஷாவின் பணி படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கிறது. ஷான் ரோல்டனின் இசையில் பாடல்கள் எளியோரின் வலியை சொல்லும் விதமாக பயணித்திருக்கிறது. பின்னணி இசையும் படத்தில் இடம்பெறும் கதாபாத்திரங்களில் ஒன்றாக பயணித்து திரைக்கதை ஓட்டத்திற்கு உயிரூட்டியிருக்கிறது
எழுதி இயக்கி இருக்கும் இயக்குனர் ராஜமுருகன்… அவரிடம் இருக்கும் பலமே சமூகப் பிரச்சினைகளை அதன் இயல்பிலேயே கதை சொல்லும் பாங்கு …இந்தப் படத்தில் சிறைச்சாலையில் மனைவிக்காக கணவன் கந்துவட்டி கயவனை அடிப்பது போன்ற காட்சிகளை சிரிப்புக்காக இருந்தாலும் ரசிக்க முடியவில்லை என்பதால் அங்கு ராஜமுருகனை தேட வேண்டி இருந்தது …தனது ஒவ்வொரு படத்திலும் மக்களின் பிரச்சினை பேசி இருக்கிறார். அதுபோல் இந்த படத்திலும் அப்பாவி கிராமத்து ஏழை மக்களின் கிட்னி திருடும் கும்பலின் முகத்திரையை கிழிப்பதுடன் ஒரு மத்திய அமைச்சர் செய்யும் அரசியலையும் மையமாக்கி படமாக்கி இருக்கிறார்…
நம்ம tamilprimenews .com ரேட்டிங் 3.6/5

